உம்ராக் கிரியைகளுக்காக வேண்டி எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் சவூதி அரேபியாவில் வசிக்கின்ற 250,000 இற்கும் அதிகமான யாத்தீரீகர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். கொரோனா வைரஸின் பரவலைத் தொடர்ந்து புனித மக்கா மற்றும் மதீனா பள்ளிவாசல்களை யாத்திரீகர்களுக்காக திறக்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கையாகவே உம்ரா கடமைகளுக்காக வேண்டி மேற்படி அனுமதி வழங்கப்படவுள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் ஏனைய மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பின் போது, ஹஜ் மற்றும் உம்ரா கமிட்டியின் உறுப்பினர் ஹானி அல்-உமைரி அவர்கள் இத்தகவலை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித ரவ்ழா ஷரீப் மற்றும் புனித மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் என்பன யாத்திரீகர்களுக்காகத் திறக்கப்படும் என ஹானி அல்-உமைரி அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார். ஏறத்தாள ஆறு இலட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு புனித ஹரம் பள்ளிவாசலில் தொழுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.உம்ரா கிரியைகளுக்காகவும், புனித மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் மற்றும் புனித ரவ்ழா ஷரீப் என்பவற்றை தரிசிப்பதற்காகவும் எட்மர்னா விண்ணப்பத்தையாத்திரீகர்கள் பூர்த்திசெய்து , அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தற்போதைக்கு புனித மக்கா மற்றும் மதீனாவினை தரிசிக்கசவூதி அரேபிய நாட்டவர்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளது.வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் அனுமதி வழங்கப்படவுள்ளதோடு, எந்த நாடுகள் யாத்திரீகர்களை புனித உம்ரா கடமைக்காக வேண்டி அனுப்ப முடியும் என அதிகாரிகள் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஹானி அல்-உமைரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக தற்போது ஒவ்வொரு நாளைக்கும் 6,000 பேர் என்றவாறு உம்ரா கடமைகளுக்காக யாத்திரீகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு சிறிய குழுக்களைக் கொண்ட யாத்திரீகர்களுக்கும் கிரியைகளை மேற்கொள்ள 3மணித்தியாலங்கள் மாத்திரம் வழங்கப்படவதோடு, புனித கஹ்பாவையும் , ஹஜ்ருல் அஸ்வத் கல்லையும் தொடுவதற்கு யாத்திரீகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. புனித ஹரம் பள்ளிவாசல் ஒரு நாளைக்கு 10 தடவைகள் கிருமிநீக்கம் செய்யப்படுவதோடு, யாத்திரீகளுக்கு அடைக்கப்பட்ட போத்தலில் ஸம் ஸம் தண்ணீர் வழங்கப்படுகின்றது. புனிதத்தளங்களைச் சுற்றி பல மருத்துவ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவப் பரிசோதனை அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments